தக்காளி ரசம்

இந்த தக்காளி ரசம் முன்பு எங்க வீட்டு சின்ன விருந்துக்கு, எங்க பக்கத்து வீட்டு சமையல்காரம்மா செய்ஞ்சாங்க….மறுபடியும் செய்முறை கேட்டு போட்டு இருக்கேன். [ இது விருந்துக்கான தக்காளி ரசம். வீட்ல நமக்கும் முயற்சி செய்யலாம். நல்லாத்தான் இருக்கும். யாரு நம்மள கேட்பா? ]

முன்பே ரெடி செய்து வைக்க வேண்டியவை

  • மிளகு, சீரகம் தனித்தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து வறலாக அரைத்து வைத்துக்கொள்ளவும்,
  • தேவையான அளவு புளியை ஊற வைத்து, பிழிந்து, சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்,

தக்காளி பிசறல்

  • தேவையான தக்காளி எடுத்துக்கோங்க,
  • அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிசறி விடுங்க,
  • இப்போது கொத்துமல்லி தழை கொஞ்சம் காம்புடன் பிய்த்து அதில் தூவி விடுங்க,
  • அரை டீஸ்பூன் அளவுக்கு வெல்லம் எடுத்து தூவுங்க,
  • கறிவேப்பிலை சிறிது எடுத்து அதையும் சேருங்க,
  • தேவைப்படும் அளவுக்கு [ இந்த கலவைக்கு மட்டுமான ] கல் உப்பு சேருங்க,
  • அரைத்து வைத்த மிளகுசீரக பொடியைத் தேவைப்படும் அளவு தூவுங்க,
  • இரண்டாக நறுக்கி வைத்த பச்சைமிளகாய்களை [ காரத்திற்கு தகுந்தாற்போல ] போடவும்,

       இப்போது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசறிவிடுங்க. பிசறி விட்டதை எடுத்து தனியே தனியே வைத்திடுங்க.

ரசம் கூட்டி வைத்தல்

  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்…. [ அடுப்பு தீயை மிக மிதமாகவே மாற்றி விடுங்க ]
  • சிறிது கடுகு போடுங்க,
  • சீரகம் போடுங்க,
  • கறிவேப்பிலை போடுங்க,
  • தோலுடனோ அல்லது தோல் இல்லாமலோ தேவைப்படும் அளவு இடித்து வைத்த பூண்டை தூவி விடுங்க,
  • சில வரமிளகாய்களைப் போடுங்க,
  • [ஏற்கனவே தக்காளி பிசறளில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்தோம் ] அதனால் இதற்கு வேண்டிய தூள் உப்பை மட்டும் சேருங்க,
  • பச்சைவாசனை போகும் வரை அல்லது கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்குங்க,

  • கலர் வந்ததும், வதக்கிக்கொண்டே, ஏற்கனவே பிசறி வைத்த தக்காளி பிசறலை எடுத்து, அப்படியே அடுப்பில் வதக்கிக்கொண்டு இருப்பதில் போடுங்க,
  • உடனேயே அத்துடன் ரெடி செய்து வைத்திருந்த புளித்தண்ணீரைக் கொட்டுங்க,
  • வதக்குவதை விடாமல் தேவைப்படும் தண்ணீரைக் கலந்துவிடுங்க,
  • இத்துடன் மீண்டும் சிறிது கொத்துமல்லி தழையை கிள்ளி போடுங்க,

  • இப்போது கொதிக்கட்டும். [ மிக மிதமான தீயை ஓரளவுக்கு பெரியதாக மாற்றி விடுங்க ]
  • தளதள என்று மொத்தமாக கொதிக்க விடாமல், லேசாக மட்டும் கொதிக்க விட வேண்டும், 
  • நுரை வரத்துவங்கும். பிறகு தக்காளி பிசறல்கள் எல்லாம் நடுவுக்கு வந்து, ஓரத்தில் ரசம் கொத்திக்கத்துவங்கும். அந்த நேரத்தில் ரசத்தை இறக்கிவிடுங்க.

இருங்க! இன்னும் இருக்குங்க…

  • வேறு ஒரு தாளிக்கும் வாணலியில் தேவைப்படும் நெய்யை [ அதிக நெய் வேண்டாம் ] ஊற்றி, காயவிடுங்க,
  • காய்ந்ததும், கறிவேப்பிலைக் கொத்தை உருவி போடுங்க, வதக்குங்க,
  • இதில் பெருங்காயத் தூளைத் தூவி, லேசாக வதக்கிவிடுங்க,
  • அடுப்பை அனைத்து விட்டு, இதனை எடுத்து, இறக்கி வைத்திருந்த தக்காளி ரசத்தில் ஊற்றுங்க,

அவ்வளவு தான் தக்காளி ரசம் ரெடி.

===============================================

செய்முறை 2

இது நான் செய்யும் வீட்டு ரசம். இந்த ரசத்தையும் செய்து பாருங்க. அருமையாக இருக்கும்.

கரைத்தல்
  • கரைத்தல்
  • புளி சிறு எலுமிச்சை அளவு
  • பழுத்த தக்காளி பழம் 2
  • கொத்தமல்லி தழை காம்பு இல்லாமல் சிறிது
  • கறிவேப்பிலை
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து, ஊறியதும் நன்கு கரைத்து கசடுகளை எடுத்துவிட்டு புளித்தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்க,
  • நன்கு பழுத்ததாக தக்காளிப் பழம் 2 எடுத்து, அந்த புளித்தண்ணீரில் போட்டு, கைகளினால் நன்கு பிசறிவிடுங்க,

    தக்காளி தோல்கள் மற்றும் சக்கைகள் தேவைப்படாது, வெளியே எடுத்துவிட்டு, புளி மற்றும் தக்காளி தண்ணீர் மட்டும் இருக்கட்டும்.
  • அந்த தண்ணீரில் கறிவேப்பிலை மற்றும் காம்புகள் இல்லாத கொத்தமல்லி தழை சிறிது எடுத்து நன்கு பிய்த்து போடுங்க,
  • உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேருங்க,
  • நன்கு கையால் கலந்து விடுங்க.

அரைத்தல்
  • மிளகு 1 ஸ்பூன்
  • சீரகம் 1 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
  • வர மிளகாய் [ காரத்திற்கு ஏற்ப ]
  • கறிவேப்பிலை சிறிது மட்டும்
  • பூண்டு தேவையான எண்ணிக்கை
    • [ பெரியது என்றால் 6 or 7, சிறியது என்றால் 10 or 11 ]
  • முதலில் பூண்டைத் தவிர அனைத்தும் போட்டு, கொரகொரப்பாக அரைத்து விடுங்க,
  • பின்னர் பூண்டு பற்களைப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்திடுங்க.

தக்காளி ரசம்
  • கடுகு
  • வெந்தையம்
  • வர மிளகாய்
  • கறிவேப்பிலை
  • பெருங்காயத்தூள்
  • கொத்தமல்லி தழை

  • அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து, அதில் தேவையான எண்ணெய்யை ஊற்றி சூடாக்குங்க,
  • எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது கடுகு, 2 மட்டும் வெந்தயம், வீரமிளகாய் 2, கறிவேப்பிலை தேவைக்கு போடுங்க,
  • உடனேயே அரைத்து வைத்ததையும் போட்டு, 2 பிரட்டு பிரட்டி விடுங்க,
  • இப்போது கரைத்து வைத்ததை சேர்த்து, பெருங்காயத்தூள் தூவி, கலந்து விடுங்க,
  • கொதிக்க விடுங்க . [இல்லை இல்லை கொதிக்க விட வேண்டாம். நன்றாக நுரைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடுங்க ]
  • ரசத்தை இறக்குவதற்கு முன்னால் கொத்தமல்லி தழையை மேலே தூவி விடுங்க.

     இந்த தக்காளி ரசத்தில் சிறிதளவு துவரம் பருப்பு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைத்தால் அது எளிமையான பருப்பு ரசமாகி விடும். [ சாம்பார் வைக்கும் போது பருப்பு தண்ணீர் எடுப்பது எளிது தானே ]

அவ்வளவு தான் தக்காளி ரசம் ரெடி.

Tags,

thakkaali rasam, rasam, தக்காளி ரசம், ரசம், காய்ச்சல் ரசம்,

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top