அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 3

Akbar and Birbal Stories / Part – 3

இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள்.

  • 7] யார் செய்த விபரீதம் இது?
  • 8] மந்திரக் கைத்தடி கதை
  • 9] மோதிரத்தைக் கண்டுபிடித்த கதை

.

7] யார் செய்த விபரீதம் இது?

அக்பர் பீர்பால் கதைகள்

முகலாய சக்கரவர்த்தி தன் குடும்பத்தாருடன் ஏரியில் உல்லாசப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். எல்லோரும் உற்சாகமாக காணப்பட, அக்பர் முகத்தில் மட்டும் ஏதோ சிந்தனை வலை. முந்தின நாள் அரசவை கூட்டத்தில் அவர் பிறரிடம் கேட்ட சந்தேகம்தான் அது – ‘இறைவன் எல்லாம் வல்லவன் என்றால், தன் பக்தர்களின் துயர் துடைக்க அவன் ஏன் அவதாரம் எடுத்து வரவேண்டும்? தன் ஊழியர்களில் யாரையாவது அனுப்பி மக்கள் பிரச்னையைத் தீர்க்கலாமே..?‘

திடீரென்று அவருடைய கவனம் சிதறியது. ஆமாம், அவருடைய அன்பு மகன் சலீம் படகிலிருந்து தவறி, நீரில் விழுந்து விட்டான். எல்லோரும் பதைபதைப்புடன் திகைத்து நிற்க, அக்பர் உடனே நீருக்குள் பாய்ந்தார். ஆழத்திற்குச் சென்று மகன் உடலைப் பற்றினார், நீந்தியபடி மேலெழுந்து மகனைப் படகில் கிடத்தினார். ஆனால் அது அவருடைய மகன் அல்ல, அவனைப் போன்ற ஒரு பொம்மை.

இதைக் கண்டு கடுங்கோபம் கொண்டார் அக்பர். ‘‘யார் செய்த விபரீதம் இது?‘‘ என்று கேட்டார்.

அப்போது அருகிலிருந்த அமைச்சர் பீர்பால், ‘‘மன்னரே, தங்கள் மகன் உயிர் பிரியும் ஆபத்தில் சிக்கிக் கொண்டான் என்று தெரிந்ததும் அப்படியே பதறிப்போய் நீருக்குள் பாய்ந்தீர்களே, அவனைக் காப்பாற்றச் சொல்லி உங்கள் வீரர்களில் ஒருவனை அனுப்பியிருக்கலாமே? ஆனால் நீங்களேதானே நேரடி நடவடிக்கையில் இறங்கினீர்கள்? உங்களைப் போலத்தான் இறைவனும். பக்தன் துயர்ப்படும்போது, தன் ஊழியர் யாரையாவது அனுப்பிவிட்டு அவர் சும்மா ஓய்வெடுப்பதில்லை; தானே நேரடியாக அவதாரம் எடுத்து வருகிறான்.‘‘ என்று விளக்கம் தந்தார்.

.

8] மந்திரக் கைத்தடி கதை

அக்பர் பீர்பால் கதைகள்

ஒரு நாள் பீர்பாலிடம் ஒரு பெரியவர் வந்து, “என் பணம், நகை எல்லாம் கொள்ளை போய்விட்டது. நீங்கள் அவனைக் கண்டுபிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்து, எனது பொருள்களை மீட்டுத் தாருங்கள்” என்றார்.

உடனே பீர்பால், “உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உள்ளதா?” எனக் கேட்டார்.

பெரியவர், “என் வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது” என்றார்.

மறுநாள், பீர்பால் அனைவரையும் அழைத்து ஒரு கைத்தடியைக் கொடுத்து, “இது ஒரு மந்திரக் கைத்தடி. ஒவ்வொருவருக்கும் ஒரு கைத்தடியைக் கொடுத்துள்ளேன். யார் திருடினீர்களோ, அவர்கள் கைத்தடி நாளை காலை அரை அங்குலம் வளர்ந்திருக்கும்” என்று கூறினார்.

அடுத்த நாள் அவர்களைத் தனித் தனியாக வைத்திருந்துவிட்டு, ஒவ்வொருவரையும் தனியாக வெளியே வரச் செய்தார்.

அதில் ஒருவருடைய கைத்தடி மட்டும் அரை அங்குலம் குறைந்திருந்தது.

உடனே பீர்பால், அவனிடம், “நீதானே திருடினாய்?” எனக் கேட்டார்.

திருடிய நபர், “ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.

பணத்தைப் பறிகொடுத்த பெரியவர், பீர்பாலிடம், “எப்படி ஐயா கண்டுபிடித்தீர்கள்?” எனக் கேட்டார்.

உடனே பீர்பால், “பெரியவரே! இது மந்திரக் கைத்தடி அல்ல; இது வளரவும் செய்யாது! திருடியவன் தடி அரை அங்குலம் வளர்ந்து தன்னைக் காட்டிவிட்டுவிடும் என்று பயந்து தன் கைத்தடியை அரை அங்குலம் வெட்டிவிட்டான். அதனால்தான் மாட்டிக்கொண்டான்” என்று பதிலளித்தார்.

திருடியவனிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொடுத்தார்.

உடனே பெரியவர், பீர்பாலைப் பாராட்டி, அந்த வேலையாளை வேலையை விட்டு நீக்கினார்.

உண்மை எப்போதும் வெல்லும்.

.

9] மோதிரத்தைக் கண்டுபிடித்த கதை

அக்பர் பீர்பால் கதைகள்

ஒரு நாள், அக்பர் தனது மோதிரத்தைத் தொலைத்துவிட்டார். பீர்பால் அரசவைக்கு வந்தபோது, ​​அக்பர் அவரிடம், “நான் என் மோதிரத்தைத் தொலைத்துவிட்டேன். என் தந்தை அதை எனக்குப் பரிசாகக் கொடுத்திருந்தார். தயவுசெய்து அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்,” என்றார். பீர்பால், “மன்னரே, கவலை வேண்டாம்! நான் உங்கள் மோதிரத்தை இப்போதே கண்டுபிடித்துத் தருகிறேன்,” என்றார்.

அவர், “மன்னரே, மோதிரம் இந்த அரசவையிலேயேதான் இருக்கிறது. அது அரசவை உறுப்பினர்களில் ஒருவரிடம் உள்ளது. யாருடைய தாடியில் வைக்கோல் துரும்பு இருக்கிறதோ, அவரிடம்தான் உங்கள் மோதிரம் இருக்கிறது,” என்றார். பேரரசரின் மோதிரத்தை வைத்திருந்த அந்த அரசவை உறுப்பினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாகத் தன் கையைத் தன் தாடியின் மீது கொண்டு சென்றார். அரசவை உறுப்பினரின் இந்தச் செயலை பீர்பால் கவனித்தார். அவர் உடனடியாக அந்த அரசவை உறுப்பினரைச் சுட்டிக்காட்டி, “இந்த மனிதரைச் சோதனையிடுங்கள். இவரிடம்தான் பேரரசரின் மோதிரம் இருக்கிறது,” என்றார்.

பீர்பால் எப்படி மோதிரத்தைக் கண்டுபிடித்தார் என்பதை அக்பரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது பீர்பால் அக்பரிடம், குற்ற உணர்வுள்ளவர் எப்போதும் பயப்படுவார் என்று கூறினார்.

.

Tags,
அக்பர் பீர்பால் கதைகள், நகைச்சுவை கதைகள், அறிவுரை கதைகள், ஊக்கப்படுத்தும் கதைகள், அக்பர் பீர்பால், புத்திசாத்தனமான கதைகள், Akbar Birbal stories in tamil, humorous stories in tamil, advice stories in tamil, motivational stories in tamil, Akbar Birbal, wise stories in tamil, குழந்தைகள் கதைகள், அரசர் கதைகள், சிறு கதைகள், சிறுவர் கதைகள், Children stories, king stories, short stories, children’s stories,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top